×

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தமிழக இலவச அரிசியை பிற மாநிலங்களில் பெறுவதில் சிக்கல்: ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வரும்

நாகர்கோவில்: தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசியை ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் இலவசமாக பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு வரத்தொடங்கியுள்ளது. தற்போது ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, கோவா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் மற்றும் கேரளா ஆகிய 11 மாநிலங்களில் இந்த நடைமுறை முதல்கட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (என்எப்எஸ்ஏ) அடிப்படையில் அரிசி கிலோ ₹3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும் வழங்கப்படும். மேலும் பருப்பு, பாமாயில், சீனி, மண்ணெண்ணெய், ரவை, மைதா, கோதுமை மாவு உள்ளிட்ட பிற பொருட்களை இந்த திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள இயலாது. தற்போது முதல்கட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 12 மாநிலங்கள் தவிர தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த திட்டத்திற்குள் கொண்டுவரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டிலேயே இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்படுகின்ற ஒரே மாநிலம் தமிழகம் ஆகும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்து இலவசமாக ரேஷன் அரிசி பெற்றுக்கொள்ள இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்ப சாப்ட்வேரில் வசதிகள் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக குடும்பங்கள் பிற மாநிலங்களில் சென்றால் அரிசியை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் சூழலும் உருவாகும். மேலும் மத்திய அரசு நடைமுறைப்படுத்துகின்ற இந்த திட்டத்தில் மாநில அரசு மானியத்தை அதிகரித்து இலவசமாக வழங்குகின்ற நிலையில் நாளடைவில் இலவச அரிசி விநியோகத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அரிசியை விலை கொடுத்து வாங்கிவிட்டு மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பது போன்ற திட்டங்களும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழும் என்றும் கூறப்படுகிறது.

81 கோடி பேருக்கு கார்டு

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியம் என்ற அடிப்படையில் 81 கோடி பேருக்கு 5 லட்சம் ரேஷன்கடைகள் வழியாக விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ரூ.1.4 லட்சம் கோடி ஆண்டுக்கு செலவிடப்படுகிறது. அதிகபட்ச மானியமாக அரிசி கிலோ ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும், தானியங்கள் கிலோ ரூ.1க்கும் வழங்கப்படும்.

Tags : Country ,Tamil Nadu , Ration Card
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!