×

கண்டலேறு அணையில் இருந்து ராட்சத பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் கைவிடப்பட்டது

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து ராட்சத பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கா திட்டப்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது தொடர்பாக கடந்த 1983ல் தமிழக அரசு-ஆந்திரா அரசு இடையே ஒப்பந்தம் ேபாடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தர வேண்டும். இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து 152 கி.மீ தூரமும், தமிழக எல்லையான ஜூரோ பாயின்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கி.மீ தூரமும் கால்வாய் கடந்த 1995ல் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த கால்வாய் மூலம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஆந்திரா தண்ணீர் தந்ததில்லை. இதற்கு, கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீரை ஆந்திரா எல்லையோர கால்வாய்களில் விவசாயிகள் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை உறிஞ்சி திருடி வருகின்றனர். இதனால், தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் 2 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் 600 கன அடி நீர் கூட தமிழக எல்லைக்கு வருவதில்லை. இது தொடர்பாக தமிழக அதிகாரிகள் புகார் அளித்தால் கூட அம்மாநில அரசால் தண்ணீர் திருட்டை தடுக்க முடியாத நிலை தான் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் முழு நீரையும் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான மாற்று திட்டங்களை கொண்டு வர முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் முன்வரைவு அறிக்கை தயார் செய்தனர். அதில், ₹6 ஆயிரம் கோடி செலவில் கண்டலேறு அணையில் இருந்து 10 அடி கொண்ட 6 ராட்சத பைப் மூலம் பூண்டி ஏரிக்கு கொண் வரும் வரையில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரூ.14 ஆயிரம் கோடி செலவில் சோமசீலா அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டப்பணிகளுக்கு ஆகும் நிதி செலவை பார்த்து தமிழக அரசு அதிர்ந்து போய் விட்டது. இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், இவ்வளவு நிதியை இந்த திட்டபணிகளுக்கு மட்டும் செலவு செய்ய முடியாது என்று கூறி முன்வரைவு அறிக்கையை திருப்பி அனுப்பி விட்டது. இதன் மூலம் கண்டலேறு அணையில் இருந்து ராட்சத பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறும் போது, கண்டலேறு அணையில் இருந்து ஒப்பந்தப்படி தரப்படுமா என்பதே கேள்விக்குறி. அப்படியிருக்கையில் இந்த திட்டத்துக்கு இவ்வளவு நிதி செலவு செய்வது வீண் என அரசு கருதுகிறது. மேலும், தற்போதைய நிதிநிலைமையில் கடன் வாங்கி இந்த திட்டத்தை செலவு செய்ய முடியாது. எனவே, தற்காலிகமாக இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Kandaleratu Dam ,dam , Continental dam
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...