சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணி பொங்கல் விடுமுறை முடிந்தவுடன் தொடங்கும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு ெசய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில தேர்தல் ஆணையரும் வார்டு மறுவரையறை ஆணையருமான பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பழனிச்சாமி, பேரூராட்சி இயக்குநர் பழனிச்சாமி, சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு, உதவி வருவாய் அலுவலர் மகேஷ் உள்ளிட்ட மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்ெகாள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை பணிகளை பொங்கல் விடுமுறை முடிந்தவுடன் உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சியை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.