- முத்துப்பேட்டு தர்கா கந்தூரி விழா புனித கொடி புனிதக் கொடியுடன் நிறைவுற்றது
- முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தர்காவின் 718ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நாளான சந்தனக்கூடு நிகழ்ச்சி கடந்த 5ம்தேதி இரவு துவங்கி 6ம்தேதி அதிகாலை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கந்தூரி நிறைவு நாளான நேற்று இரவு புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இரவு 7மணிக்கு தாவூதியா மஜ்லிஸில் உலக அமைதிக்காக புனித மௌலூது ஷரீபு ஓதப்பட்டு.
இரவு 8 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் ஜியாரத் முன்பாக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்று 9 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி துவங்கியது. அப்பொழுது ஜாம்பை ஜீபைர் சாஹிப் துவா ஓதினார். தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழக்கத்துடன் விதவிதமான வாடிக்கை வேடிக்கைகளுடன் புனித கொடி இறக்கப்பட்டது. எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் நீண்ட வரிசையில் நின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு துஆ பிரார்த்தனை செய்து தப்ரூக்(பிரசாதம்) வழங்கப்பட்டது. இதில் தர்கா டிரஸ்டிகள்,தமீம் அன்சாரி சாஹீப், நூர்முகமது உள்பட தர்கா டிரஸ்டிகள், ஏராளமான இஸ்லாமியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.