×

கட்டிடம், மின்வசதி, கண்காணிப்பு கேமரா இல்லை...குமரி சோதனை சாவடிகளின் அவல நிலை: அச்சத்துடன் பணியாற்றும் காவலர்கள்

கருங்கல்: குமரி மாவட்டத்தில் இருந்து  கேரளாவுக்கு எரிசாராயம், கனிமவளம், மணல் கடத்தல் போன்றவை அதிக அளவில் நடந்து வந்தது. இதை தடுக்கும் வகையில் அப்போது பத்மநாபபுரம் ஆர்டிஓவாக இருந்த ஜோதிநிர்மலா கடும் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து காவல்துறை சார்பிலும் எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. இது கொள்ளை கும்பலுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. ஆகவே குறுக்கு சாலைகள் வழியாக தங்களது கடத்தல் சம்பத்தை கும்பல் அரங்கேற்ற தொடங்கியது. இதற்கும் செக் வைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சில வருடங்களுக்கு முன்பு தக்கலை சரக பகுதியான களியக்காவிளை, அருமனை, பளுகல், ஆறுகாணி, கடையாலுமூடு ஆகிய போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 33 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. இதே போல் குளச்சல் சரக பகுதிக்கு உள்பட்ட சூழால், நீரோடி, கொல்லங்கோடு, காக்காவிளை உள்பட 12 இடங்கள் என்று மொத்தம் 50க்கும் மேற்பட்ட  இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. குறிப்பாக களியக்காவிளை, படந்தாலுமூடு, ஆரல்வாய்மொழி ஆகிய சோதனை சாவடிகளில் 24 மணிநேரமும் 4 பேர் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற சோதனை சாவடியில் 2 பேர் பணியில் இருப்பார்கள்.

இது நாளடைவில் 2 பேர் இருந்த இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது குளச்சல் சரக பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளில் இருந்த போலீசார் திரும்ப பெறப்பட்டுள்ளனர். ஆக தற்போது 3 சோதனை சாவடிகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, படந்தாலுமூடு, அஞ்சுகிராமம் ஆகிய சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மின்வசதி இல்லாததால் இதில் பல கேமராக்கள் கழற்றப்பட்டுள்ளன. சோதனை சாவடி பணிக்கு செல்லும் போலீசார் அந்த பகுதி பிரமுகர்கள் உதவியுடன் சோதனை சாவடியில் ஷெட் போட்டும், தங்களது சொந்த செலவிலேயே இருக்கைகள் போட்டும் உள்ளனர். ஆனால் காவல்துறை அவர்களுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்கு கழிப்பறை வசதி கூட செய்துகொடுக்கவில்லை. இதனால் சோதனை சாவடிகளில் பணியில் இருக்கும் போலீசார் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். சிறிய சோதனை சாவடி பணியில் இருக்கும் போலீசாருக்கு வாக்கி டாக்கி கூட வழங்கவில்லை. இதே போலத்தான் சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்ட களியக்காவிளை மார்கெட்ரோடு சோதனை சாவடியும் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் மிக மோசமான நிலையில் இருந்தது அம்பலமாகி உள்ளது.

குமரியின் கடற்கரை கிராமமான  நீரோடியிலும் ஒரு சோதனை சாவடி உள்ளது. சுற்றிலும் ஒரு வீடு கூட கிடையாது.  மாறாக கல்லறை தோட்டங்கள்தான் உள்ளன. இந்த சோதனை சாவடி வழியாக ரேஷன்  பொருட்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. ஆனால் இங்குள்ள சோதனை  சாவடியில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருக்கிறார். அவரது  கையில் துப்பாக்கி ஆயுதங்கள் எதுவும் கிடையாது. ஆகவே பெயரளவுக்கு நீரோடி  சோதனை சாவடி செயல்படுகிறது. இங்கு பணியில் இருக்கும் போலீஸ்காரரின்  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு களியக்காவிளை சோதனை  சாவடியில் பீர் பாட்டில் தாக்குதல் நடந்தது. இதுபோன்ற  சம்பவங்கள் நடக்கும்போது நடவடிக்கையில் இறங்கும் போலீஸ் அதிகாரிகள்,  அதன்பிறகு கண்டுகொள்வது இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க  அனைத்து சோதனை சாவடிகளிலும் கட்டிடத்துடன் போலீசாருக்கு அடிப்படை வசதிகளை  செய்து கொடுக்கவேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து  கட்டுப்பாட்டுடன் இணைக்கும் வகையில் இன்டர்நெட் வசதி  செய்துகொடுக்கவேண்டும். சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருக்கும்  போலீசாருக்கு அதிநவீன துப்பாக்கி வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செயல்படாத கண்காணிப்பு கேமரா

சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை நடந்த சோதனை சாவடியிலும் போலீசார் கண்காணிப்பு கேமரா அமைத்திருந்தனர். ஆனால் பின்னர் அந்த கேமரா அகற்றப்பட்டது. படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகள் பள்ளிவாசல் வழியாக மறுபுறம் மெயின்ரோட்டில் சென்று தப்பியுள்ளனர். பள்ளிவாசலின் வெளிப்புற வாயில் அருகே தான் மெயின் ரோட்டில் ஒரு சோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பல நாட்களாக கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்பட்டு இருந்தால் தீவிரவாதிகள் வந்த வாகனம், உடன் யாராவது வந்தார்களா என்பது குறித்து மேலும் சில தடயங்கள் கிடைத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியடைந்த ஏடிஜிபி

கொலை நடந்த சோதனைசாவடியில் கடத்தல் வாகனங்கள் வந்தால் வழிமறித்து நிறுத்துவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பி உடைந்து சின்னா பின்னமாகி கிடக்கிறது. சந்தேகப்படும் படியாக வாகனங்கள் வந்தால் தடுத்து நிறுத்த முடியாத நிலை அங்கு உள்ளது. சுற்றிலும் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது அந்த சோதனை சாவடி. அதை பார்க்கும்போது சோதனை சாவடிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. சிமெண்ட் கல்லால் கட்டப்பட்ட சிறிய ெஷட் தான் இந்த சோதனை சாவடி. அதன் மேல் ஆஸ்பெக்டாஸ் போடப்பட்டு, மழை தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆங்காங்கே காணப்படுகின்ற ஓட்டைகள் அட்டைபெட்டியால் அடைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சாலையோரம் உள்ள குடிசையை விட மிக மோசமான நிலையில்தான் அந்த சோதனை சாவடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் சம்பவ இடம் வந்த ஏடிஜிபி ஜெயந்த்முரளி சோதனை சாவடி எங்கே என்று கேட்டார். போலீசார் அந்த குடிசையை காட்டி கொடுத்தனர். அதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து நின்றார்.

போலீசாருக்கு துப்பாக்கி

சோதனை சாவடிகளில் பணியாற்றும் போலீசாருக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதில்லை. கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம், மகாதானபுரம் பகுதிகளில் உள்ள சோதனைசாவடிகளில் ஆயுதப்படை போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வில்சன் கொலை சம்பவத்தையடுத்து சோதனை சாவடிகளில் போலீசாரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஒருவர் இருந்த இடத்தில் 2 பேர் இனி பணியில் இருப்பார்களாம். இது தவிர பணியில் இருப்பவர்களுக்கு துப்பாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : building ,guards ,Kumari , Building, power station, surveillance camera, checkpoint, guards
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!