டெல்லி : உத்தரப்பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில், ஜெய்பூர் நோக்கி 50 பயணிகளுடன் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கன்னூஜ் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கொடூர விபத்தில் பேருந்து பயணிகள் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தன. பேருந்திலிருந்து சிறுகாயங்களுடன் தப்பித்து உயிர்பிழைத்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார். இந்நிலையில் காயமடைந்தவர்கள் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.