பெங்களூரு: மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, ’ஒரு தேசம், ஒரு ேரஷன் கார்டு’ திட்டம் கர்நாடகாவில் சோதனை அடிப்படையில் செயல்பட துவங்கியது. ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தினர் நாட்டில் எந்த மாநிலத்திலும் நியாயவிலை கடைகளில் உணவு தானியம் பெற்றுக் கொள்ள வசதியாக ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தை முதல் கட்டமாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா, ஜார்க்கண்ட், அரியானா, திரிபுரா மாநிலங்களில் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படுத்துவதாக அறிவித்தது.
இதன்படி, கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களிலும் கடந்த 1ம் தேதி முதல் இத்திட்டம் செயல்பட தொடங்கியது. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளிலும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகை பதிவு செய்வது உணவு தானியம் பெற்று வருகிறார்கள். அதேபோல், கர்நாடகாவில் வசிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பொருட்கள் வாங்குகின்றனர். அதன் தொடக்கமாக, தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த மக்களை கேரள மாநிலம், காசர்கோடுவுக்கு அழைத்து சென்று அதிகாரிகள் உணவு தானியம் வாங்க வைத்தனர். அதேபோல், கர்நாடகா எல்லையோரங்களில் வசிக்கும் 23 சதவீத கார்டுதாரர்கள், தெலங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் உணவு தானியம் பெற்றுள்ளனர்.