கோபி: ‘‘பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய தமிழகம் முழுவதும் பெரிய நகரங்களில் இயந்திரம் நிறுவப்படும்’’ என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.சி கருப்பணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: எடப்பாடியை தனி மாவட்டமாக அறிவித்தாலும், பவானியை எடப்பாடி மாவட்டத்துடன் இணைக்க மாட்டோம். ஆகையால், பவானி பகுதியை சேர்ந்தவர்கள் அச்சமடைய தேவை இல்லை. பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக சென்னையில் தொடங்கப்பட்டதை போல தமிழகம் முழுவதும் பெரிய நகரங்களில் கொண்டு வரப்படும். அதற்கான இயந்திரமும் நிறுவப்படும். பிளாஸ்டிக் பாட்டிலை இயந்திரத்தில் போட்டால் கிடைக்கும் டோக்கனை உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் கொடுத்து வாங்கும் பொருட்களில் பணத்தை கழித்துக்கொள்ள முடியும்.
கன்னியாகுமரி அருகே களியக்காவிளையில் உதவி ஆய்வாளர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடித்தால் மட்டுமே உண்மை நிலை தெரிய வரும். இவ்வாறு கே.சி.கருப்பணன் கூறினார்.