×

ஜம்மு காஷ்மீரில் முடக்கப்பட்டுள்ள இன்டர்நெட் சேவை வழங்குவது பற்றி ஒரு வாரத்தில் முடிவு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், இணையதள சேவை முடக்கம் ஆகியவற்றை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு யூனியன் பிரதேசங்களிலும் பதற்றம் ஏற்பட்டது. போராட்டங்கள் வெடித்தது. இதனால், அவற்றை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன செல்போன், இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இம்மாநில முன்னாள்  முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், செல்போன், இணையதள சேவைகள் முடக்கத்தையும்,  கட்டுப்பாடுகளை எதிர்த்தும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கை ஆசிரியர் அனுராதா பாசின் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிடும்படி அவர்கள் கோரினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து மக்களை பிணைக் கைதிகளாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் தான் இதுபோன்ற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,’ என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்தாண்டு நவம்பர் 27ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கருத்துரிமை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசியல் சாசன பிரிவு 19ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். இந்த உரிமையை உறுதி செய்வது அவசியமான ஒன்று. அதே நேரம், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இணையதள சேவையை முடக்கலாம். அதில், நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இருப்பினும், அடிப்படை உரிமையை 144 என்ற தடை உத்தரவால் மக்களிடம் இருந்து பறிக்கக் கூடாது. மேலும், இணையதள சேவை எதற்காக முடக்கப்படுகிறது என்பதற்கான விரிவான விளக்கத்தை மக்களுக்கு அரசு முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும்.

மேலும், இணையதள சேவையை அரசு முடக்குவது தொடர்பான அரசியல் காரணங்களுக்குள் நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. ஆனால், விதிக்கப்படக் கூடிய கட்டுப்பாடுகள் நிச்சயமாக நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவைதான்.  மேலும், தனி மனிதனின் கருத்து சுதந்திரமும், பாதுகாப்பும் வெவ்வேறு என்றாலும், அது இரண்டையும் உறுதிப்படுத்துவது அரசின் தலையாய கடமை. இதைத் தவிர, ஜம்மு-காஷ்மீரில் நடந்த வன்முறைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அனைத்து விவரங்களும் தெரியும். அதில், எந்தவித சந்தேகமும் கிடையாது. அதே நேரம், மக்களின் கருத்து சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். அதனால், ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவையை மீண்டும் வழங்குவது பற்றியும், கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றியும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

‘அகந்தை மீதான எதிர்தாக்குதல்’

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் அரசியலமைப்பு விரோதமான மற்றும் அகந்தை பிடித்த நிலைப்பாட்டுக்கு எதிரான பதில் தாக்குதலாகும். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்பால் மாலிக் தான் இதற்கு முழு பொறுப்பு. இதற்காக, தற்போது அவர் வகிக்கும் கோவா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

மோடி அரசுக்கு அதிர்ச்சி

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக, 2020ம் ஆண்டில் மோடி அரசுக்கு முதல் மிகப்பெரிய அதிர்ச்சி கிடைத்துள்ளது. நாடு அரசியலமைப்புக்கு தான் தலை வணங்குகிறதே தவிர, மோடி - அமித்ஷாவுக்கு  முன்பல்ல,’ என கூறியுள்ளார்.

Tags : Jammu ,Kashmir , Decision to provide ,disabled internet service ,Jammu and Kashmir
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...