திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பள்ளி மாணவன் முகத்தில் மயக்க மருந்து தெளித்து காரில் கடத்தி, புதரில் வீசிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவொற்றியூர் வரதராஜர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் கிஷோர் (11). கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பென்சில் வாங்குவதற்காக வீட்டிலிருந்து கிஷோர் அருகில் உள்ள கடைக்கு சென்றான். ஆனால், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில், காலை 10 மணிக்கு ஜானகிராமன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கத்திவாக்கம் ரயில்வே நிலையம் அருகே உள்ள புதரில், சிறுவன் ஒருவன் மயங்கிய நிலையில் கிடந்தான்.
இதை பார்த்த பொதுமக்கள், அவனை மீட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவனிடம் விசாரித்தபோது, உங்களது மகன் எனக்கூறி, உங்களது செல்போன் எண்ணை கொடுத்தான், என தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜானகிராமன், உடனடியாக ஆட்டோ மூலம் கத்திவாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து மகன் கிஷோரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர், இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் ஜானகிராமன் புகார் செய்தார். போலீசார், மாணவன் கிஷோரிடம் விசாரித்தபோது, வீட்டின் அருகே கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை, என கூறினான். மாணவனை கடத்தியது யார், எதற்காக கடத்தி சென்று பின்னர் புதரில் வீசிவிட்டு சென்றார்கள் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.