பெரம்பூர்: எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 1996 முதல் 2018ம் ஆண்டு வரை லூயிஸ் சகாயராஜ் என்பவர் வேலை செய்து வந்தார். அந்த காலகட்டத்தில் 2015 முதல் 2017 வரை இவர் போலி ஆவணங்களை கொடுத்து சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பள்ளியை சேர்ந்த எலிசஸ் பிராண்டோ (50) என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் லூயிஸ் சகாயராஜ் மற்றும் அவருக்கு இந்த மோசடியில் உதவியாக இருந்த எபினேசர், அமல்ராஜ், அந்தோணி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் கூலி வேலை செய்து வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த காசித் பினாசாத் சர்மா (49), நேற்று துறைமுகம் எதிரே சாலையை கடந்தபோது, பைக் மோதியதில் இறந்தார்.
எண்ணூர் முகத்துவாரம் குப்பத்தை சேர்ந்த சுதாகர் (37), நேற்று அதிகாலை முகத்துவார பகுதியில் படகில் மீன்பிடிக்க சென்றபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் தவறி விழுந்து இறந்தார். மணலியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி (36), நேற்று அதிகாலை வில்லிவாக்கம் பஸ் நிலையம் சென்றபோது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த 3 பேர், கத்தி முனையில் இவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி மணிகண்டன் (38), நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையம் சன்றபோது, 2 மர்ம நபர்கள், இவரது செல்போனை பறித்து சென்றனர். அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பாஸ்கர் (37) மற்றும் ஆழ்வார் (42) ஆகிய இருவரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்று, அவர்கள் பணம் தர மறுத்ததால் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய அரும்பாக்கம் என்எஸ்கே நகரை சேர்ந்த அருணகிரி (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சூளைமேடு பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன மேலாளர் ராகேஷ்நாயர் (35), நேற்று அதிகாலை நுங்கம்பாக்கத்தில் சைக்கிளில் சென்றபோது, 3 பைக்கில் வந்த 6 பேர், இவரை இரும்பு கம்பியால் தாக்கி, செல்போனை பறித்து சென்றனர். மண்ணடி பவளக்காரன் தெருவை சேர்ந்த சந்திரா (54) என்பவரின் வீட்டுக்குள் நுழைந்து, பீரோவில் இருந்த 3 சவரன் செயினை திருடிக்கொண்டு தப்பிய, துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பவுல்ராஜ் (29), மண்ணடி மூர் தெருவை சேர்ந்த பாலு (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.