அம்பை: அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. காலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், கோபூஜை, தாண்டவத் தீபாராதனயும் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி நான்கு ரத வீதி மற்றும் நான்கு மாட வீதி வழியாக வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதையடுத்து சுவாமி மீண்டும் அம்மையப்பர் கோயிலை வந்தடைந்தார். மேலும் அருள்மிகு அம்மையப்பர் திருக்கோவிலில் ஜன. 1ம் தேதி முதல் 9ஆம் தேதிவரை தினசரி மாலை 7.30 மணிக்கு ஸ்ரீ நடராஜ பெருமானுக்கும் மாணிக்கவாசகருக்கும் திருவெம்பாவை பாடல்களுடன் சிறப்பு தீபாராதனைகளுடன் திருவெம்பாவை - மாணிக்கவாசகர் விழா நடந்தது. நிகழ்ச்சியில் தர்க்கார் வெங்கடேஸ்வரன், செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, கணக்கர் கந்தசாமி, உள்ளிட்ட பக்தர் பேரவையினர் மற்றும் ஏராளமான சுற்று வட்டார பகுதி பக்தர்களும் கலந்துகொண்டனர்.