×

உக்ரைன் விமானத்தை ஈரான்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது; ஆனால் உள்நோக்கம் கொண்டு செய்யவில்லை: ஆஸ்திரேலியப் பிரதமர்

பெர்த்: உக்ரைன் விமானம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் உள்நோக்கம் அற்றது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.
இதில், 167 பயணிகள் சென்றனர். மேலும், 9 விமான ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் 2 இன்ஜின்களில் ஒன்றில் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக விமானம், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் தவறுதலாக ஏவுகணையை வீசி உக்ரைன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது. இவ்விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் விமான விபத்து குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “எங்கள் நாடு உட்பட பல்வேறு உளவுத் தரப்புப் பிரிவினர் தரப்பிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் உக்ரைன் விமானத்தை ஈரான்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், ஈரான் இதனை உள்நோக்கம் கொண்டு செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Ukraine ,Iran ,premier ,Australian , Ukraine, Iran, Motivation, Australian Prime Minister
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...