×

பல ஆண்டுக்கு பின் செங்கரும்பு விளைச்சல் சூப்பர்: விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு செங்கரும்பு நல்ல விளைச்சலை தந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தோன்றிய இப்பண்டிகையில் கரும்புக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யும் வகையில் சிவகங்கை அருகே சாலூர், மலம்பட்டி, சிவல்பட்டி, சானிப்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்புகள் விளைவிக்கப்படுகின்றது. பல்வேறு வகையான வெல்லம் தயாரிப்பது, பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட தேவைகளுக்கே இந்த வகை கரும்புகள் பயன்படும். தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் அடுத்த பொங்கலுக்கான கரும்பு நடவு தொடங்கி விடுகிறது. மாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலங்களில் கரும்பின் கரணை (வேர்ப்பகுதி) நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படு வருகிறது. 10 மாதங்களில் முழுமையாக வளர்ந்து கரும்புகள் அறுவடைக்கு தயாராகின்றன.

இப்பகுதியில் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லாததால் கிணற்று பாசனம் மூலமே கரும்பை விளைவித்தனர். இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவில் பெய்ததால் கரும்பு நல்ல விளைச்சல் இருந்தது. இங்கு விளையும் கரும்புகள் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு இப்பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘சிவகங்கை மாவட்டத்தில் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் மட்டுமே செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. பிற பகுதிகளில் ஆலைக்கரும்புகளே பயிரிடுகின்றனர். மாவட்டத்தில் ஆண்டுதோறும் சீரான அளவில் போதிய மழை இல்லை.

மழை குறைந்து வருவதால் செங்கரும்பு விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஜிஎஸ்டி வரிக்கு பிறகு உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உரம், மருந்து விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் உற்பத்தி செலவு அதிகப்படியாக உயர்ந்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகைக்காக கரும்புகளை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு வண்டி கரும்பு (300கரும்புகள்) ரூ.4 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் என்பதால் விலை குறைந்துள்ளது. இருப்பினும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பல ஆண்டுகளுக்கு பிறகு கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் மகிழ்ச்சியே. கடந்த ஆண்டு ஒரு வண்டி கரும்பு ரூ.6 ஆயிரம் விற்றது. தற்போது கரும்புகளை பார்த்து விலை நிர்ணயம் செய்து லோடு ஏற்றும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் கரும்பு கத்தரி, வெண்டை, முள்ளங்கி, மிளகாய், தக்காளி உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு அரசு சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : Sugarcane, yields, growers, happiness
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...