புதுடெல்லி: லோக்பால் அமைப்பின் உறுப்பினரான முன்னாள் நீதிபதி திலிப் பி போஸ்லே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க, ‘லோக்பால் அமைப்பு’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி பதவியேற்றார்.
தொடர்ந்து, லோக்பால் உறுப்பினர்களாக அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திலிப் பி போஸ்லே உட்பட பல்வேறு உயர் நீதிமன்றங்களை சேர்ந்த 4 முன்னாள் நீதிபதிகள் கடந்தாண்டு மார்ச் 27ல் பொறுப்பேற்றனர். மேலும், நீதித்துறையை சேராத 4 உறுப்பினர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், லோக்பால் உறுப்பினர் பதவியை போஸ்லே திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கடந்த திங்களன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பியதாகவும், அதில், தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.