டொகியோ: தன்னுடைய ட்வீட்டை ரீட்வீட் செய்தவர்களில் 1000 பேருக்கு தலா 6.55 லட்சம் கொடுத்த ஜப்பான் தொழிலதிபர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகில் பலருக்கும் வித்யாசமான ஆசைகள் இருக்கும். அப்படி, மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் போது அது எந்த அளவுக்கு அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள ஜப்பான் தொழிலதிபர் ஒருவர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.
ஜப்பானின் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ ஆக இருப்பவர் யூசகு. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலாவுக்கு ட்ரிப் கூட்டிக்கொண்டு போவதற்கு பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்து கவனிக்க வைத்தவர் இவர். மேலும், பல கலைநய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது, கோடிக்கணக்கில் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை வாங்கி சேர்ப்பது என்று உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர்.
இந்த நிலையில், மேலும் ஒரு புதிய முயற்சியின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் யூசகு. ஜனவரி 1-ம் தேதி தான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 1000 பேரும் 7-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த ட்வீட்டிலும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஏன் இவ்வாறு தான் செய்கிறேன் என்பதை யூ-ட்யூப் வீடியோ மூலம் தெரிவிப்பதாக கூறியவர். அந்த வீடியோவில், இந்தப்பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக்கிறது என்பதை அறியும் முயற்சி. இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். சொன்னபடியே தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு பரிசுத்தொகையை அவர் அளித்துள்ளார். அவரின் ட்வீட்டை சுமார் 41 லட்சம் பேர் ரீ-ட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.