சேலம்: சேலத்தில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளை நடந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளார். சேலம் பேருந்து நிலையம் அருகே சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 3 நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 13ம் தேதியன்று குரங்குசாவடி பகுதியில் உள்ள சீனிவாசனின் 3வது மகன் பாஷ்யம் என்பவரின் வீட்டின் பின்புறம் கதவு தாழ்ப்பாளை கழட்டிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்து சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 6லட்சம் ரூபாய் ரொக்கம் மேலும் வைர நகைகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொள்ளையர்களை கண்டுபிடிக்கக் கூடாதென்பதற்காக வீட்டின் பின்புறம் மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு சென்றது சிசிடிவியில் தெரியவந்துள்ளது. மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் தலைமையில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகைப் பதிவு போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது சிக்கிய சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவற்றில் 2 கொள்ளையர்கள் தலையில் மங்கி குல்லா அணிந்து கொண்டு வீட்டின் பின்புறம் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளில் வரும் நபர்கள் குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி, சேலம் மாநகர போலீசார் கேட்டுக்கொண்டுள்ளார்.