மணமேல்குடி: கட்டுமாவடி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் அழிந்து வரும் அலையாத்திக் காடுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியானது கட்டுமாவடி தொடங்கி மீமிசல் அடுத்த ஏனாதி வரையிலான 32 கிமீ நீளம் கொண்டது. கட்டுமாவடி, வடக்கம்மாபட்டினம், பொன்னகரம், ஆவுடையார்பட்டினம், புதுக்குடி, முத்துக்குடா, மீமிசல் போன்ற பகுதிகளில் மட்டும் சுமார் 4000க்கும் அதிகமான நாட்டுப்படகு மீனவர்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் 2000க்கும் அதிகமான விசைப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பொதுவாகவே இந்தப் பகுதிகளில் ஆழம் குறைந்த சதுப்பு நிலப்பரப்பு காணப்படுகிறது. இங்கு அதிகமான பகுதிகளில் குறைந்த அளவில் அலையாத்தி மரங்களைக் கொண்ட அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன.
இவை பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படுவதுடன், இவை இருக்கும் இடங்களில், அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கப்படும். அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர்நீரில் வளரும் தாவரங்களாகும்.இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக்காடு எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன.
கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் இயற்கை உயிர் அரண்களாக அலையாத்திக் காடுகள் விளங்குகின்றன. இவை புயல், ராட்சத அலை, பருவகால மாற்றம், அலை உயர்வு செயல்கள் மற்றும் கடல் அரிப்பு போன்ற கடற்கரை தீமைகளின் போது வேகத்தடைகளாக சேவை புரிந்து கடற்கரையில் உள்ள பகுதிகளை பாதுகாக்கின்றன.மீன், இறால், நண்டு மற்றும் நத்தைகள் இனப்பெருக்கம் செய் யும் உற்பத்தி தளமாகவும் அலை யாத்திக்காடுகள் விளங்குகின்றன.பல்வேறு வகையான உயிரினங்கள் பல்லுயிர் பெருக்கம் செய்யவும், இடம்பெறச் செய்யவும் ஏதுவான பகுதியாக அலையாத்தி காடுகள் இருக்கின்றன. உயிரினங்களுக்கு உணவு வளையமாகவும் இவை விளங்குகின்றன. காற்றில் கலந்துள்ள நச்சுகளை போக்கி, தூய்மையான காற்றையும் அலையாத்தி காடுகள் வழங்குகின்றன. இயற்கை சூழலுக்கும், மனித சமூகத்துக்கும் மிகப்பெரிய அளவில் பயன்தரும் அலையாத்திக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.
வளர்ச்சி என்ற பெயரிலும், நடைபாதை வழித்தடங்களுக்காகவும், வெளித்துறைமுக விரிவாக்க திட்டங்களுக்காகவும், அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் கட்டுமாவடி, வடக்கம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், முத்துக்குடா போன்ற பகுதிகளில் சிறிய அளவிலான அலையாத்தி மரங்கள் உள்ளன. தற்போது இம் மரங்கள் அனைத்தும் அழியும் தருவாயில் உள்ளது. பொது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அழிவுப் பாதையில் செல்கிறது. இம்மரத்தின் இலை, தழைகள் ஆடு, மாடுகளுக்கு தீவனங்களாகவும், இதன் கிளைகள் விறகுக்காகவும் வெட்டப்படுகின்றன. இதனால் இம் மரங்கள் குறைந்து அலையாத்தி காடுகள் அழிந்து வருகின்றன. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாகும்.