சென்னை: மூதாட்டி புகார் மீது நடவடிக்கை எடுக்காத கொடுங்கையூர் எஸ்.ஐக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொடுங்கையூர், காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜம்மாள் (72). இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வயதான நான் வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு வீட்டின் அருகே வசித்து வரும் பானு என்பவர் என்னை தாக்கினார். அதில், எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் என்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, மருத்துவமனை அளித்த தகவலின்படி கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நான் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் விசாரணை ஏதும் நடத்தவில்லை. இதனால் பானு மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க மாநகர கமிஷனருக்கு தபால் மூலம் புகார் தெரிவித்தேன்.
புகார் எந்த நிலையில் உள்ளதை அறிந்து கொள்ள எனது மகன், கொடுங்கையூர் காவல் நிலையத்து சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம், ‘‘நீங்கள் பொய் புகார் கொடுத்துள்ளீர்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்று கூறி மறுத்துள்ளனர். மேலும், ‘‘உன் மீதும் பொய் புகார் பதிவு செய்து சிறையில் அடைப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மாநில மனித உரிமை ஆணையர் உறுப்பினர் சிதரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் பாதிக்கப்பட்ட சரோஜம்மாளுக்கு ₹10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை உதவி ஆய்வாளரிடம் இருந்து வசூல் செய்து கொள்ள வேண்டும். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.