சென்னை: சென்னை அடுத்த ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருபவர் சுரேஷ் (23). நேற்று முன்தினம் இரவு சுரேஷ் கடையில் வியாபாரத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் பானிபூரி சாப்பிடுவதுபோல் சுரேஷிடம் 1500 பணம் கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ், ‘என்னிடம் பணம் இல்லை’ என்று கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், ‘நான் யார் தெரியுமா? சென்னையில் மிக பெரிய ரவுடி. பல கொலைகள் செய்துள்ளேன்’ என கூறியவாறு கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்து 1500 பணம் பறித்துள்ளார். தகவலறிந்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் வியாசர்பாடி பீவி காலனியை சேர்ந்த ஜோதீஸ்வரன் (27) என்பதும், அவர் மீது தகராறு மற்றும் கொலை முயற்சி வழக்கு என சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், செம்பியம் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும் என 11 வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.