மேலூர்: சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட 18 வழக்குகளில், 30 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக கிரானைட் நிறுவனங்கள் மீது மேலூர் குற்றவியல் கோர்ட்டில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அனைத்து வழக்குகளிலும் அரசு தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அது தங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என கிரானைட் அதிபர்கள் குற்றம் சாட்டவே, தற்போது அந்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் அரசு தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று பிஆர்பி உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் மீதான 18 வழக்குகளில் 30 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை அரசு தரப்பு வக்கீல் ஷீலா நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து விசாரணையை மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்.