ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் மூலம், கண்மாய் பராமரிப்பு பணி ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்படுகிறது. இதன்படி, கூமாப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கு, வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயை பராமரிக்க ₹8 லட்சத்து 63 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த செல்லத்துரை பணிகளை முடித்து 10 மாதமாகியும், இதற்கான பணத்தை வழங்க கமிஷன் கேட்டு அதிகாரிகள் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த செல்லத்துரை, நேற்று ராஜபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்து, அதிகாரிகளிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர் தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து மீட்டனர். பின்னர் அதிகாரிகள், செல்லத்துரையிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ராஜபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.