×

மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கும் டாக்டர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கும் டாக்டர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பதில் தருமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிரபல மருந்து நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சுமார் 130 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் தினமும் 50 மில்லியன் நோயாளிகளுக்கு 1 மில்லியன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நவீன மருத்துவத்தில் இந்தியா சிறந்து விளங்குவதால் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். குறிப்பாக சென்னைக்கு மருத்துவ சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். ஆனால் தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைவது கிடையாது.

இந்திய மருந்து நிறுவனங்கள் உலக அளவில் மிகப்பெரிய அளவில் உள்ளது. சுமார் 33 மில்லியன் டாலர் மதிப்பில் இந்திய மருந்து நிறுவனங்கள் இயங்கி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்திய மருந்து நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம் கடந்த 2018ம் ஆண்டு ரூ.1,29,015 கோடிகளாக உயர்ந்துள்ளது. இந்த மருந்து நிறுவனங்கள் தேவையில்லாத மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக டாக்டர்களுக்கு தங்க நகை, ரொக்கப்பணம், கிரடிட் கார்டு, இன்பச்சுற்றுலா என பல வழிகளில் லஞ்சமாக வழங்கப்பட்டு வருவதாக ஒரு நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

இதனால் டாக்டர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதுமட்டுமல்லாமல் சோதனை என்ற வகையில் எக்ஸ்ரே, இசிஜி என ஆய்வுக்கூடங்கள் மூலமாகவும் டாக்டர்களுக்கு கமிஷன் அதிகம் கிடைக்கிறது. இந்திய மருத்துவ தொழில் நடத்தை விதிகளில் அன்பளிப்பு, லஞ்சம் ஆகியவற்றை மருந்து நிறுவனங்களில் வாங்கினால் அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 1 ஆண்டுவரை தொழில் செய்ய மருத்துவ கவுன்சிலால் தடை விதிக்க முடியும். ஆனால், இந்த விதிகள் மீறப்படுவது சாதாரணமாக நடக்கிறது.

சிலநேரங்களில் டாக்டர்களுக்கு அவர்கள் விரும்பும் இளம்பெண்கள் கூட பரிசளிக்கப்படுகின்றனர். திரைமறைவில் நடந்து வரும் இந்த மருத்துவ மாபியாக்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தமட்டில் மருந்து விற்பனைக்காக பல வழிகளில் லட்சக்கணக்கில் செலவழித்த தொகையை தங்களின் ஈட்டிய வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என நிறுவனம் கோருவது அதிர்ச்சிகரமாக உள்ளது. எனவே, இந்த வழக்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்க்கிறது.

மருந்து நிறுவனங்களிடம் டாக்டர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்நிறுவனங்களின் மருந்துகளை சிபாரிசு செய்வது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே கடந்த 5 ஆண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மருந்துகளை அதிக விலைக்கு பொதுமக்களிடம் விற்க தங்க நகை, கிரடிட் கார்டு, ரொக்கப்பணம் என பல வழிகளில் லஞ்சம் பெற்ற டாக்டர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?. சம்மந்தப்பட்ட நிறுவனம் மருந்து விற்பனைக்காக மருத்துவர்களின் விருந்தோம்பலுக்காக செலவழித்ததாக கூறப்படும் ரூ.42,81,986ஐ தொழில் நடத்தை விதிகளை மீறி லஞ்சமாக பெற்ற டாக்டர்கள் யார்?.

லஞ்சம் வாங்கிய அந்த டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மருத்துவ விதிகளை மீறி லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர், மருந்து பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

* டாக்டர்கள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகள் அரசு நிர்ணயித்த  விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
* சோதனை என்ற வகையில் எக்ஸ்ரே, இசிஜி என ஆய்வுக்கூடங்கள் மூலமாகவும் டாக்டர்களுக்கு கமிஷன் அதிகம் கிடைக்கிறது.

Tags : companies ,doctors ,Medical Council ,High Court , Drug companies, bribery, doctors, medical council, High Court Question
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...