கரூர்: கரூர் வாழைத்தார் கமிஷன் மண்டிக்கு மருத்துவ குணம் வாய்ந்த செவ்வாழை தார்கள் ஏலத்துக்கு அதிகளவு வந்துள்ளன. கரூர் ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் வாழைத்தார் கமிஷன் மண்டி கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்டிக்கு திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து வாழை விவசாயிகளால் கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் அனைத்தும் இங்கு வைத்து ஏலம் விடப்பட்டு வருகிறது. வியாபாரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப இதனை ஏலம் எடுத்துச் சென்று வருகின்றனர். அந்த வகையில் கமிஷன் மண்டிக்கு பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி போன்ற ரகங்கள் நேற்று ஏலத்துக்கு வந்தன. தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் தார்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டுள்ளன. ஒரு சில நாட்களில் பொங்கல் பண்டிகைக்கான ஏலம் விடும் சமயத்தில் அதிகளவு காய்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று கமிஷன் மண்டிக்கு திருப்பூர் மாவட்டம் சிவகிரி, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவு செவ்வாழை ரகங்கள் ஏலத்துக்கு வந்தன.
மருத்துவ குணம் வாய்ந்த பழங்களில் இந்த செவ்வாழையும் ஒன்று என்பதால் ஏராளமான வியாபாரிகள் இதனை ஏலம் எடுத்துச் சென்றனர். அந்த வகையில் செவ்வாழை ஒரு காய் ரூ.8, 9 மற்றும் 10 என்ற அளவில் வியாபாரிகளால் காய்களின் தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப ஏலம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விவி கமிஷன் மண்டி நிர்வாகி வாங்கல் முருகையன் கூறுகையில், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி போன்ற வாழைத்தார் ரகங்கள் வழக்கமாக ஏலத்துக்கு வரும். செவ்வாழை ரகங்கள் எப்போதாவது ஏலத்துக்கு வரும். அந்த வகையில், நேற்று இரண்டு மாவட்ட பகுதிகளில் இருந்து செவ்வாழை ரகங்கள் ஏலத்துக்கு வந்தன. வியாபாரிகளும் ஆர்வத்துடன் ஏலம் எடுத்துச் சென்றனர். மேலும், விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் காய்கள் வரத்தும் அதிகமாக இருக்கும். விலையும் சற்று கூடுதலாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றார்.