டெல்லி : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ட்ரைக் நடக்கும் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீலச்சல், இஸ்பட் நிகாம், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், MECON பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெல் நிறுவனம் தமிழகத்தில் திருச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெல் உட்பட மத்திய அரசின் 5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவதற்கு ஒப்புதல்
அதே போல் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் நடைமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன் வருபவர்களுக்கு அழைப்பு விடுப்பது, தனியார் மயமாக்கும் போது அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குபவர்களுக்கு அளிக்கப்படும் ஒப்பந்தம் தொடர்பான நடைமுறை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை, இந்த மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2018-19 ஆம் நிதியாண்டில் மட்டும், ஏர் இந்தியா, 8 ஆயிரத்து 556 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. அந்த நிறுவன ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஏற்கனவே நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவரும் மோடி அரசு தற்போது பெல் நிறுவனத்தையும் தனியார் மயமாக்கப்பட்டதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதார சரிவை சரிசெய்ய எந்த திட்டமும் வகுக்காமல் வழக்கம்போல் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் வேளையில் மட்டுமே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.