தேனி: ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்திற்குள் வழக்குகளுக்காக பிடிபட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்டிபட்டி போலீஸ் நிலைய வளாகத்திற்குள் சுமார் 200 இருசக்கர மோட்டார் சைக்கிள்கள் பல வழக்குகளுக்காக பறிமுதல் செய்யப்பட்டு கிடக்கின்றன. வாகன விபத்துக்கள், குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்களை வழக்குப்பதிவின்போது, போலீசார் பறிமுதல் செய்வது வழக்கம். இதுபோன்று பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வழக்கு முடியும்வரை போலீஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
ஆனால் ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் எவ்வித பாதுகாப்புமின்றி துருபிடித்துப்போய் கிடக்கின்றன. போலீஸ் நிலையம் வருவோரில் சிலர் பறிமுதல் செய்யப்பட்டு எவ்வித பராமரிப்புமின்றி கிடக்கும் இத்தகைய வாகனங்களில் இருந்து உதிரிபாகங்களை எடுத்துச் சென்று விடுகின்றனர். வழக்கு முடிவுக்கு வரும்போது, இத்தகைய வாகனங்களை உரியவரிடம் ஒப்படைக்கும்போதோ, வாகனத்தை ஏலம் விட நேரிடும்போது வாகனங்கள் தரமற்றதாகிவிடுவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.