டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த முன்கூட்டிய மதிப்பீட்டை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 6.8 சதவீதம். இதை விட தற்போதைய மதிப்பீடு மிகவும் குறைவு. நடப்பு நிதியாண்டின் முதல் 2 காலாண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 6.2 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, இந்த ஆண்டில் 2 சதவீதமாக குறைந்தது, விவசாயம், மின் உற்பத்தி துறைகளில் பின்னடைவு போன்றவை சரிவுக்கு முக்கிய காரணம் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜிடிபி குறித்த மத்திய அரசின் முன்கூட்டிய மதிப்பீடு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்ட 2019-20 தேசிய வருமானத்தின் மேம்பட்ட மதிப்பீடு பொருளாதாரத்தை பாஜக அரசு புறக்கணித்திருப்பதை காட்டுகிறது. 5 சதவீத பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். முதல் பாதி வளர்ச்சி விகிதம் 4.75 சதவீதமாகவும் இரண்டாம் பாதியில் வளர்ச்சி விகிதம் 5.25 சதவீதமாகவும் இருக்கும் என்று நம்புவது கடினம் என்றும் முக்கிய துறைகளான விவசாயம், சுரங்கம், உற்பத்தி மற்றும் கட்டுமானம் ஆகியை 5 சதவீதத்துக்கு குறைவாகவே வளரும் என்று கூறியுள்ளார்.
வேலை வாய்ப்பை உருவாக்கும் அனைத்து துறைகளும் 3.2 சதவீதம் வளர்ச்சி அல்லது அதற்கு குறைவான வளர்ச்சி விகிதமே இருக்கும் என்றும் இந்தியாவில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுவது பெரும் பொய் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர். தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 சதவீதமாக உயர்ந்தாலும், தனிநபர் வருமானத்திலும் வாழ்க்கையிலும் சிறிய வளர்ச்சி கூட இருக்காது என்றார். மேலும், ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஜேஎன்யு துணை வேந்தர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.