×

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்களை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக  அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக  நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.   இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ  வாதிடும்போது,  தங்களது புகாரில் ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தகவலில் சந்தேகம் இருந்தால் மட்டுமே ஆரம்பகட்ட விசாரணை நடத்த முடியும்.

லஞ்ச ஒழிப்பு துறை மீது நம்பிக்கை இல்லாததால்,  இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று வாதிட்டார். அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஆஜரான  வக்கீல் சுரேஷ், தமிழக அமைச்சருக்கு   எதிராக மாநில அரசுத் துறை நடத்தும் விசாரணை நியாயமாக இருக்காது.  ஊழல் தடுப்பு சட்டத்தின் விதிகளின்படி மூன்று மாதத்திற்குள் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க  வேண்டும். ஆனால்,  அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கி ஓராண்டாகியும் விசாரணையை இன்னும் முடிக்கவில்லை என்று வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை குற்றவியல் வக்கீல்  ஏ. நடராஜன், மனுதாரர்கள் புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணை முடிக்கப்பட்டு, அது தொடர்பான அறிக்கை  லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம்  அளிக்கப்பட்டுள்ளது.  லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர்தான் அறிக்கை மீது முடிவெடுக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக  நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை  சீல் வைத்த கவரில் லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Tags : SP Velumana ,Minister SB ,Velumani ,Corruption Department ,High Court , Minister SP Velumana, Corruption Department, High Court
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...