சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி வருகிற 18ம் தேதி பேரணி நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வருகிற 18ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.