×

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவுகளை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் நேற்று பதில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில்  உள்ளது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு கூடுதலாக செய்ய மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அது நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக கூடுதலாக 10  சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதனை இன்னும் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நடைமுறைக்கு கொண்டு வராமல் மாநில அரசுகள் காலதாமதம் செய்து வருகின்றன.

அதனால் உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரும் போது ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 69 சதவீதம்  இடஒதுக்கீட்டுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு தனி சட்டமும் இயற்றிட வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.  இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு  தொடர்பாக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அந்தந்த மாநில  அரசுகளே முடிவுகளை எடுக்கலாம். இதில் கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்தும் அடங்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. குறிப்பாக 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பொருத்தமட்டில் தனது அதிகாரத்திற்கு  உட்பட்டு அதன் கீழ் இருக்கும் துறைகளில் மட்டும் தான் மத்திய அரசு தனது செயல்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : State governments ,reservation issue State governments , 10% reservation, state government, supreme court, central government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...