புதுடெல்லி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் ஏற்கெனவே ஆந்திர அரசு பல இடங்களில் தடுப்பணைகளை கட்டியதால் வெள்ளக் காலங்களில் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணையின் உயரத்தை ரூ.50 கோடி செலவில் 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது. இந்நிலையில், பாலாறு அணை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் நவீன் சின்கா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் தரப்பில் விசாரணையை ஒத்திவைக்க கோரப்பட்டதால், வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.