ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு 3 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் 2வது நாளான நேற்று, ரவீந்திர நாத் மகதோவின் பெயரை முதல்வர் ஹேமந்த் சோரன் சபாநாயகராக முன் மொழிந்தார். இதனை அவரது கட்சியின் எம்எல்ஏ சாம்பை சோரன் வழி மொழிந்தார். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவை சபாநாயகராக ரவீந்திர நாத் மகதோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் நளா தொகுதியில் இருந்து முதல் முறையாக கடந்த 2005ம் ஆண்டு எம்எல்ஏ.வானார். இவர் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்த போதிலும் கடந்த 2014, 2019 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.