சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் நகரும் படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) சிறுவனின் தலை மாட்டியதில் படுகாயமடைந்தான். உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னை கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் சசிகலா (31). கணவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக மகன் ரமேஷ்பாபு (13) உடன் வசித்து வருகிறார். ரமேஷ்பாபு அருகில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். பொங்கல் பண்டிகைக்காக முன்னிட்டு சசிகலா தன் மகனுக்கு புத்தாடைகள் வாங்க புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடைக்கு ேநற்று முன்தினம் மாலை சென்றார். கடையின் 8வது மாடிக்கு ரமேஷ்பாபுவும் நகரும் படிக்கட்டில் சென்றார். அப்போது ரமேஷ்பாபு நகரும் படிக்கட்டில் விளையாட்டாக படுத்துக்ெகாண்டதாக கூறப்படுகிறது.
திடீரென ரமேஷ்பாபு தலை முடி நகரும் படிக்கட்டிற்கும் சுவருக்கும் இடையே மாட்டிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தான். இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனே நகரும் படிக்கட்டை நிறுத்தி சிறுவனை மீட்டனர். சிறுவன் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உரிய நேரத்தில் சிறுவனை பொதுமக்கள் மீட்டதால் அவன் உயிர்தப்பினார். பிறகு சசிகலா மகனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிறுவன் ரமேஷ்பாபு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். பின்னர் சம்பவம் குறித்து சசிகலா துணிக்கடை நிர்வாகம் மீது வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் புரசைவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.