×

வருமானவரி வழக்கில் விடுவிக்க கோரிய கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி : 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு

சென்னை: வருமான வரித்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, ஜனவரி 21ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு சொந்தமாக முட்டுக்காடு அருகே நிலம் ஒன்று இருந்தது. அந்த நிலத்தை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் நிறுவனத்திற்கு 4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால் இந்த நிலத்தின் சந்தை மதிப்பை குறைத்து விற்பனை செய்து, அதன் மூலம் கார்த்தி 6.38 கோடியும், ஸ்ரீநிதி 1.35 கோடியும் ரொக்கமாக வாங்கியதாகவும். அந்த பணத்தை 2014-15ம் ஆண்டு வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் 2015ம் ஆண்டு வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அட்வாண்டேஜ் ஸ்டேடர்ஜிக் கன்சல்டிங் என்ற நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பண பரிமாற்றம் தொடர்பாகவும், ரொக்கமாக வாங்கியது தொடர்பாகவும் சில ஆவணங்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வருமானவரித்துறை, வருமான வரி கணக்கில் முறைகேடு தொடர்பாக சென்னை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது கார்த்தி சிதம்பரம் எம்.பி யாக தேர்வானதால், வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லாததால் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தனர். இதற்கு வருமானவரித்துறை தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில் இரு தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். அப்போது நீதிபதி தீர்ப்புக்காக வழக்கை தள்ளிவைத்திருந்தார். அதன்படி வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, லிங்கேஷ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், நிதி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கு விசாரணையை நடத்த வேண்டும். இதற்காக வரும் 21ம் தேதி 2 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

Tags : Karthi Chidambaram , Karthi Chidambaram's plea ,released , income tax case
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...