பெங்களூரு: ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு வழங்குவதற்காக இட்லி உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற இஸ்ரோ முனைப்பு கொண்டுள்ளது. முதற்கட்டமாக ரோபோவை விண்ணுக்கு அனுப்பி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளனர். விண்ணுக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 4 வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இந்த மாத இறுதியில் இருந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மைசூரில் உள்ள பாதுகாப்புத்துறைக்கான உணவு பரிசோதனை மையம் விண்வெளி வீரர்களுக்கான உணவு பொருட்களை தயாரித்திருக்கிறது. தொடர்ந்து, விண்வெளிக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் பதப்படுத்தப்பட்ட எக் ரோல், இட்லி, வெஜிடேபிள் புலாவ், வெஜ் ரோல், பாசிப்பருப்பு அல்வா உள்ளிட்ட உணவு பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. உணவு சூடுபடுத்தும் சாதனங்களும் விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளன. மேலும் புவியீர்ப்பு விசை அற்ற விண்வெளியில் தண்ணீர், பழச்சாறு உள்ளிட்டவற்றை அருந்த சிறப்பு கலன்களும், பிரத்யேக உறையும் வடிவமைக்கப்பட்டுள்ளன.