கவுகாத்தி: பிரதமர் மோடி இருநாடு கொள்கைகளை பின்பற்றுகிறார் என்றும், அவர் இந்தியாவின் ஹிந்து ஜின்னாவாக உருவெடுத்துள்ளார் என அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தருண் கோகாய், பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, பாஜக அரசின் அடக்குமுறை கொள்கையின் வெளிப்பாடு தான் இந்த தாக்குதல். இது இந்தியாவுக்கு மேலும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். நாங்கள் பாகிஸ்தானியர்கள் போல் பேசுவதாக மோடி பேசுகிறார். ஆனால் அவர்தான் அண்டை நாட்டின் தரத்துக்கு தன்னை தாழ்த்தி உள்ளார் என்றார்.
பாஜ., மற்றும் அதன் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.,ன் ஹிந்துத்துவாவை விரும்பவில்லை என்பதை, நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் வாயிலாக இந்தியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மத அடிப்படையில் இந்தியாவை பிளவுப்படுத்திய பிரிவினையின் போது, பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பிரசாரம் செய்த இருநாடு கொள்கைகளை, மோடியும் பின்பற்றுகிறார். அவர் இந்தியாவின் ஹிந்து ஜின்னாவாக உருவெடுத்துள்ளார். நாங்கள் இந்துகள் தான்; ஆனால் நம் நாடு ஹிந்து ராஷ்டிராவாக மாறுவதை விரும்பவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கும் பெரும்பான்மையான மக்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் கூட ஹிந்துக்கள் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.