×

ஊழல் என்பதே நோக்கம்; பாஜ அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம் என நடக்கும் அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஊழல் என்பதே நோக்கம்; பாஜ அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம் என்று நடக்கும் அதிமுக ஆட்சியில், ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம். இந்த ஆட்சியில், முதல்வரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மட்டுமல்ல; ‘முதல்வர் எவ்வழி எங்களுக்கும் அவ்வழி’ என்று, துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்து திளைத்து வருகின்றனர். நுனி முதல் அடிவேர் வரை ஊழல் பாய்ந்தோடுவதால், மாநில நிர்வாகம் எனும் விருட்சம் உளுத்து, வலுவிழந்து, மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத ஒதியமரமாகி விட்டது.

கொடநாடு முதல் குட்கா வரை, ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம் வரை, செய்யாதுரை முதல் சேகர் ரெட்டி வரை, எங்கும் ரெய்டுகள், ரெய்டுகள், ரெய்டுகள், கணக்கற்ற ரெய்டுகள். “ரெய்டுகள்” என்பது நாள்தோறும் நடக்கும் சகஜ நிகழ்வாகி, மாநிலமே அவமானத்தால் கூனிக் குறுகிவிட்டது. 4 லட்சம் கோடி ரூபாய் கடன், 5 லட்சம் குற்றங்கள்-என கடன் சுமை எப்போதும் இல்லாதபடி ஏறியும், குற்றங்கள் பெருகியும் கூட, அதுகுறித்து கிஞ்சிற்றும் கலங்காமல், கடுகளவும் கவலைப்படாமல், ‘என் கடன் ஊழல் செய்து நாளைக் கழிப்பதே’ என்ற பாணியில் பொல்லாத ஆட்சி ஒன்று இங்கே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது.     
    
வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை; அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றும் அக்கறை இல்லை; விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இந்த ஆட்சியில் நிறைவோ, நிம்மதியோ இல்லை. மதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து-நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜ அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்து, அது நிறைவேறக் காரணமாகி; சிறுபான்மை இஸ்லாமியர்க்கும், இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து; தவறுகளுக்கெல்லாம் உச்ச கட்டத் தவறு இழைத்துவிட்டது எடப்பாடி அதிமுக.

உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம்- காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள்-அதிமுக எனும் முக்கோணக் கூட்டணி அமைத்து; அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு. நடுநிலையோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், யாருக்கும் பயன்படாத, அதிமுகவினர்க்கு மட்டுமே பயன்படுகிற, பொல்லாத-ஒருதலை ஆட்சியே இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மக்கள் நலனில் எப்போதும் ஏனோதானோவென நடந்து வரும் இப்படிப்பட்ட ஆட்சியில்; “ஊழல் என்பதே நோக்கம், பாஜ அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்”- என்று நடக்கும் அதிமுக ஆட்சியில்; ஏதோ சடங்குக்காகவும், சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையால் நாட்டில் எந்ததாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

Tags : Governor ,speech ,government ,paradise ,country ,MK Stalin ,Bajaj ,AIADMK ,BJP , The purpose is to corrupt; Baja, AIADMK rule, Governor's speech, MK Stalin, Report
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...