துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (18). வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், தனது நண்பரான சசிகுமார் உள்ளிட்ட 18 பேருடன் நேற்று முன்தினம் அக்கரை கடற்கரைக்கு சென்றார். அங்கு விஷ்ணு, சசிகுமார் ஆகியோர் கடலில் குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கி உயிருக்கு போராடினர்.
இதை பார்த்ததும் சக மாணவர்கள் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மீனவர்கள், இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சசிகுமார் மட்டும் மீட்கப்பட்டார். விஷ்ணுவின் உடல், ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.