புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தொழில் நிறுவனங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், நாட்டின் பெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் பாரதி மிட்டல், கவுதம் அதானி, ஆனந்த் மகிந்திரா, அனில் அகர்வால் மற்றும் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதற்கிடையில், நிறுவனம் ஒன்றின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்கள் குறித்து பேசியதாவது:
முறைகேட்டில் ஈடுபடும் சில பெரு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் எதிரான நடவடிக்கையாக அல்ல. வெளிப்படை தன்மை வாய்ந்த சூழ்நிலையில் தொழில்துறையில் நிறுவனங்கள் அச்சமின்றி, எந்த வித தடையும் இன்றி செல்வ வளம் சேர்க்க வகை செய்யும் முயற்சிதான் இது. தொழில்துறையினர் முதலீடு செய்ய வரிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. 5 லட்சம் கோடி பொருளாதார இலக்கு என்பது வளர்ச்சியின் ஒரு கட்டம்தான். உண்மையில் எங்கள் இலக்கு இதை விட அதிகமானது; உயர்வானது என்றார்.