மெயின்புரி: உத்தரப் பிரதேசத்தில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர், போலீசாரின் பாதுகாப்பையும் மீறி, ஜட்டியில் மறைத்து கொண்டு வந்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மணீஷ் யாதவ், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தந்தை, வளர்ப்பு தாய், அவரது மகன் ஆகியோரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று அவர் எடாவா சிறையில் இருந்து மெயின்புரியில் உள்ள கூடுதல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது நீதிமன்றத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாதவின் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துப்பாக்கி பற்றி விசாரணை நடத்தியதில், மணீஷ் யாதவ், ஜட்டியில் மறைத்து அதை நீதிமன்றத்துக்கு எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. அது நடக்கும்போது தவறதலாக வெடித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பை மீறி கைதியிடம் துப்பாக்கி வந்தது எப்படி என்று விசாரணை நடக்கிறது.