புதுடெல்லி: `‘மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், மிகவும் ஆபத்தான திட்டம்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது: மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் தீய நோக்கம் கொண்டது. இது மிகவும் ஆபத்தானது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கடந்த 2010ம் ஆண்டு தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆர்) திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கும் தற்போது கொண்டு வரப்பட இருக்கும் என்பிஆருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. மத்திய அரசின் 2020ம் ஆண்டிற்கான என்பிஆரில் தேவையற்ற பல தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அவை அசாமில் என்சிஆர் அமல்படுத்தப்பட்டதைப் போன்று நாடு முழுவதிலும் இதனை அமல்படுத்துவதற்கான பாஜ அரசின் மறைமுகத் திட்டமாகும். இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.