புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுக எம் எல் ஏ மற்றும் கட்சி நிர்வாகி ஆகியோர் வட்ட வழங்கல் அதிகாரி அக்பர் அலியை ஒருமையில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டையில் காமராஜபுரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைப்பெற்றது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு வழங்கினார். இந்த விழாவில் மேடையில் நின்ற மாவட்ட வழங்கல் அலுவலரை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் அதிமுக செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கீழே இறங்கு எனவும் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டார் எனவும் ஒருமையில் இருவரும் திட்டி உள்ளனர்.
இதன் பின்னணியில் விசாரித்தபோது கீரனூரில் நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவ்வாறு முடியாது என மாவட்ட வழங்கல் அதிகாரி அக்பர் அலி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் அதிமுக செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வழங்கல் அலுவலரை ஒருமையில் .திட்டியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அங்கிருந்த மற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.