×

டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல்: ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டம் நடந்தது. இதில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென மீண்டும் வன்முறை வெடித்தது. இரும்பு கம்பி, குச்சிகள் மற்றும் கம்பிகளால் ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த 20 பேர் கொண்ட கும்பல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கண்மூடித்தனமாக தாக்கி, பல்கலை வளாகத்தில் இருந்த சொத்துக்களை சேதப்படுத்தினர்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் உட்பட 28 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக இடதுசாரி அமைப்பு மாணவர்களின் பிரிவான ஜேஎன்யூ மாணவர் சங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்த ஏபிவிபி ஆகிய இரு மாணவர் அமைப்புகளும், பல்கலையில் நடந்த வன்முறைக்கு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏ.எம்.யூ), ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (ஜே.யூ), பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் வளாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குலை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அதிர்ச்சியாகவும், பயங்கரமாகவும் இருக்கின்றன. முகமூடி அணிந்தவர்கள் ஜே.என்.யூ., விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியுள்ளனர். காவல்துறை என்ன செய்கிறது? போலீஸ் கமிஷனர் எங்கே? தொலைக்காட்சியில் நேரடியாக காண்பிக்கப்படும் போதே தாக்குதல் நடக்கிறது எனில் அரசின் ஆதரவுடன் மட்டுமே நடந்திருக்க வேண்டும். இது நம்ப முடியாத அளவில் உள்ளது. ஜே.என்.யு.மாணவர்களை தாக்கியவர்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : attack ,men ,JNU ,Delhi ,P Chidambaram , Delhi, JNU Men, Fascist Attack, P. Chidambaram
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு