சென்னை: தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதற்கிடையே, ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையை தொடங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் உரையாற்றினார்.
* பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை பயன்படுத்துங்கள்.
* ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு செல்கிறது என்றார்.
* நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்கு முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.
* ஜனநாயத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது என்றார்.
* நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மிக விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
* சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.
* ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு சுமார் ரூ.7000 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது.
* மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
* தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை சிறப்பாக செய்து வருகிறது.
* மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பிற்கு தமிழக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
* மாமல்லபுரத்திற்கு சிறப்பு சுற்றுலா மேம்பாட்டு நிதி வழங்க பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.
* அதற்கான ரூ.560.30 கோடி மதிப்பில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாடு திட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
* கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
* பரம்பிக்குளம் -ஆழியாறு பிரச்சனையை தீர்க்க கேரள முதல்வரை தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசியது பாராட்டுக்கு உரியது.
* பெண்ணையாற்று படுகையில், மார்க்கண்டே ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
* தமிழக அரசின் ஒப்புதலின்றி, கர்நாடகம் பெண்ணையாற்றுப் படுகையில் நீர்தேக்கம் அமைக்க முடியாது.
* காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
* தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று சரியான தருணத்தில் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட்டதற்கு நன்றி .
* இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
* தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
* முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் முகாம் மூலம் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 5 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
* புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மூலம் மக்கள் அரசு திட்டங்களை எளிதாக பெற வகை செய்யப்பட்டுள்ளன.
* தமிழ் மொழி மற்றும் தமிழக கலாச்சாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
* நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
* சமய வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும் உரையாற்றினார்.