×

இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறோம் உங்கள் நாட்டைப் பற்றி மட்டும் கவலைப்படுங்கள்: இம்ரான்கானுக்கு ஓவைசி அறிவுரை

ஐதராபாத்: `உங்கள் சொந்த நாட்டை பற்றி கவலைப்படுங்கள். இந்திய முஸ்லிமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவுரை கூறியுள்ளார். ஐதராபாத்தில் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான கூட்டத்தில்  கலந்து கொண்ட அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் அத்தொகுதியின் எம்பி.யுமான அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: வரலாற்று புகழ்மிக்க சார்மினாரில் வரும் 25ம் தேதி சிஏஏ.வுக்கு எதிராக போராட்டம் நடைபெறும். அன்று நள்ளிரவு மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடுவோம். அதற்கு முன்னர், ஐதராபாத்தில் வரும் 10ம் தேதி அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு அரியானாவில் ஜாட் சமூகத்தினரின் போராட்டத்தில் ரூ. 2,000  கோடியும், குஜராத்தில் படேல் சமூகத்தினரின் போராட்டத்தின் போது 600 போலீஸ் வாகனங்களும், 1,800க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்களும்  தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டன. அப்போது, எத்தனை பேரிடம் இருந்து பொதுச் சொத்து அழிப்பு தடுப்பு சட்டம்- 1984ன் கீழ் மோடி அரசு இழப்பீடு பெற்றது? ஒரு பைசா கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. ஆனால், உபி.யில் போராட்டம் நடத்திய முஸ்லிம்களிடம் இருந்து ரூ.14.50 லட்சம் இழப்பீடாக பெறப்பட்டுள்ளது. ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி அநீதி இழைக்கிறீர்கள்?.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வங்கதேச சம்பவ வீடியோவை வெளியிட்டு இந்தியா மீது பழி சுமத்திய செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இந்திய முஸ்லிம்கள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் சொந்த நாட்டை பற்றி  கவலைப்படுங்கள். ஜின்னாவின் தவறான கொள்கையை எப்போதோ நிராகரித்து விட்டோம். இந்திய முஸ்லிம்களாக இருப்பதை பெருமையாக நினைக்கிறோம். இவ்வாறு ஓவைசி பேசினார்.

Tags : Indian ,Muslims ,country , Indian Muslim, pride, country, worry, Imrankan, Owaisi, Advice
× RELATED முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும்...