×

லிபியாவில் ராணுவ பள்ளி மீது தீவிரவாதிகள் வான்வெளி தாக்குதல்: 30 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் காயம்

திரிபோலி: லிபியாவில் ராணுவ பள்ளி மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து உள்ளனர். லிபியாவில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி மோமெர் கடாபி, கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்தது. முன்னாள் ராணுவ தளபதி கலீபா கப்தார் தலைமையிலானோர்  லிபியா தேசிய இடைக்கால பேரவையின் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கடந்த ஏப்ரல் முதல் கலீபா கப்தார் தலைமையிலான குழு தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரிபோலியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நேற்று முன்தினம் திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ பள்ளியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 30 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் செய்யும்படி பொதுமக்களை சுகாதார துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கப்தார் படையினர் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


Tags : militants ,Libya ,military school ,air strike , Libya, military school, militants, air strikes, 30 killed
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி