×

மனைவியுடன் பேசிய விவகாரம் சப் -இன்ஸ்பெக்டர் மீது கணவர் பரபரப்பு புகார்

பூந்தமல்லி: மனைவியுடன் பேசியதை தட்டிக் கேட்டதால் தன்னை தாக்கியதாக சப் -இன்ஸ்பெக்டர் மீது காவல் நிலையத்தில் கணவர் புகார் கொடுத்துள்ளார். சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர், ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ். இவர், எனது மனைவியுடன் அடிக்கடி பேசி வருகிறார். இது எனக்கு பிடிக்காததால் பலமுறை கண்டித்தேன். ஆனாலும் அவர் எனது மனைவியுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

நேற்று முன்தினம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த நான், சப் -இன்ஸ்பெக்டர் ராஜேஷிடம் சென்று, எனது மனைவியுடன் பேசக்கூடாது, என்றேன். அதற்கு அவர், என்னை தாக்க முயன்றார். இதையடுத்து, ராஜேஷ் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்தவர்களிடம், எனது மனைவிடம் ராஜேஷ் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி கேட்டால் என்னை தாக்க முயல்கிறார். அவரை நீங்கள் கண்டிக்க வேண்டும், என கூறினேன்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், என்னை சரமாரியாக தாக்கினார். இதில், காயமடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே, என்னை தாக்கிய சப் -இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர், எனது மனைவியுடன் பேசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் தெரிவித்திருந்தார். இதனிடையே, தன் மீது ஜனார்த்தனன் பொய் புகார் அளித்துள்ளதாக ராஜேஷ் தரப்பில் இருந்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தான்சன் சேவியர் இருவரிடமும் விசாரணை செய்து வருகிறார். சப் -இன்ஸ்பெக்டர் மீது பெண்ணின் கணவர் புகார் அளித்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Sub-Inspector ,affair , Wife, Affair, Sub-Inspector, Husband, Complainant
× RELATED அரிவாளுடன் சுற்றியவர் கைது