×

டீக்கடையில் வாய்த்தகராறு பிரபல ரவுடி வெட்டிக்கொலை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

சென்னை: ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள டீக்கடையில் பேசிக்கொண்டு இருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டதில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வண்டலூர் கிளாம்பாக்கம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் வீரா (21). பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி காவல் நிலையங்களில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள டீக்கடையில் பைக்கை நிறுத்திவிட்டு கடை உரிமையாளரிடம் ரவுடி வீரா பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது டீ குடிக்க வந்தவர்களுக்கும், வீராவுக்கும் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் வீராவை சரமாரியாக வெட்டினர். இதில் வீரா, உடல் முழுவதும் வெட்டுப்பட்டு ரத்தவெள்ளத்தில் விழுந்து துடித்தார். இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. தகவலறிந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரவுடி வீராவை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் செல்லும் வழியில் வீரா இறந்தார்.

இதையடுத்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த வாரம் தாம்பரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நண்பர்களுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் பறித்த வழக்கில் ரவுடி வீரா சிறையில் இருந்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வெளியில் வந்துள்ளார். எனவே முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Rowdy Vettikolai , Dekkadai, Voice, Famous Rowdy, Vettikolai
× RELATED தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி வெட்டிக்கொலை * மது அருந்தியபோது தகராறு