திருமலை: தெலங்கானா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். கரிம்நகர் மாவட்டம் கரிம் நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் நந்திதா(3), எல்கேஜி மாணவி. நேற்று வெளியிடப்பட்ட மாதிரி வாக்காளர் பட்டியலில் நந்திதா(35) பெண் வாக்காளர் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பெயருக்கு அருகே 3வயது சிறுமியான நந்திதா போட்டோ இடம்பெற்றுள்ளது. இதனை அறிந்த ரமேஷ் தனது 3 வயது மகளுக்கு எவ்வாறு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றது என்பது குறித்து தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது தவறு நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் படத்தை நீக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள மாதிரி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வரக்கூடிய நிலையில், இல்லாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது முற்றிலும் மாநில அரசு உள்ளாட்சி தேர்தலை அவர்களுக்கு ஆதரவாக மாற்ற வேண்டும் என தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களை பட்டியலில் வைத்துக்கொண்டு மற்றவர்களின் பெயர்களை நீக்கம் செய்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.