கன்னியாகுமரி: பாரம்பரிய சில்லரை வணிகத்தை அன்னிய வெளிநாட்டு கம்பெனிகள் ஆக்ரமித்து இந்தியாவை வெளிநாட்டு பொருட்களின் சந்தையாக மாற்றி விட்டன. இந்த பொருளாதார பேரழிவில் இருந்து நாட்டை காக்க உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் கடந்த 1ம் தேதி சென்னையில் விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
இந்த பயணம் விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நேற்று காலை நிறைவடைந்தது. தொடர்ந்து அன்னிய வர்த்தக நுகர்வு பொருட்களான பிஸ்கட், குளிர்பானங்கள், டீ பாக்கெட் போன்றவைகளை தரையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டேவிட்சன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க தலைவர் தம்பிதங்கம் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் ராஜாராம், சண்முகசுந்தரம், அர்ஜூனன், மாவட்ட நிர்வாகிகள் கருங்கல் ஜார்ஜ், கதிரேசன், ராஜாமணி, அருள்ராஜ், ஜாண்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.